26.4 C
Cañada
Wednesday, July 3, 2024
spot_img

வார ராசி பலன்கள் (10.06.2024–16.06.2024)

மேஷம்:
மேஷ ராசியின் யோகவாரம் இது. குறிப்பாக வார ஆரம்பத்தில் சந்திரன் நான்காம் வீட்டிலேயே அமர்ந்திருப்பது இளைய பருவ மேஷ ராசிக்காரர்களுக்கு கல்வி, வேலை சம்பந்தமான முன்னேற்றங்களைத் தரும். குறிப்பாக முனைவர் பட்டம், எம்.பில், சி.ஏ போன்றவைகளை முடிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தவர்கள் தடைகள் விலகி பட்டம் பெறுவதற்கான முன்னேற்பாடுகளை செய்து கொள்வீர்கள். ராசிநாதன் வலுவாக இருப்பதால் பிரச்சினைகள் அனைத்தும் கட்டுக்குள் இருக்கும், எல்லாவற்றையும் உங்களால் சமாளிக்க முடியும்.
இளைய பருவத்தினரின் ஆற்றலும்; தைரியமும் வெளிப்படும் வாரம் இது. உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். தன ஸ்தானம் வலுவடைவதால் எதிர்பாராத பணவரவும் இருக்கும். உங்களில் கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் சாதிக்கும் நேரம் வந்து விட்டதால் இனி கவலை ஒன்றும் இல்லை. மேஷத்தில் பிறந்த அனைவருக்கும் இப்போது நல்லவைகள் மட்டுமே நடக்கும். இதுபோன்ற நல்ல கோட்சார கிரகநிலை இருந்தும் ஒருவர் கஷ்டப்படுகிறார் என்றால் பிறந்த ஜாதகப்படி அவருக்கு கடுமையான தசா,புக்திகள் நடந்து கொண்டிருக்கும்

ரிஷபம்:
ரிஷபத்திற்கு வளர்பிறை காலம் இது. நட்புக் கிரகங்கள் நல்லநிலையில் இருப்பதோடு, ராசிநாதன் சுக்கிரன் இரண்டாம் வீட்டில் சுபத்துவமாக இருப்பது நன்மைகளை தரும் என்பதால் ரிஷபத்தினர் எதிலும் துடிப்புடன் இறங்கி செயலை முடித்து காட்டும் வாரம் இது. மறைமுக எதிர்ப்புகள் விலகும். ஆரோக்கிய குறைபாடு உள்ளவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். பெண்களால் லாபம் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். வியாபாரிகளுக்கு தொழில் சிறக்கும். புதிய கிளைகள் தொடங்கவோ, தொழிலை விரிவாக்கம் செய்யவோ இது நல்ல நேரம்.
மூன்றாம் மனிதரின் தலையீட்டினால் இருந்த பிரச்னைகள் தீரும். இதுவரை இருந்து வந்த அனைத்து தடைகளும் விலகும். பெண்களுக்கு இது உற்சாகமான வாரம். வேலை செய்யும் இடத்தில் மதிக்கப் பெறுவீர்கள். யாருக்காவது எதாவது செய்து தருவதாக கொடுக்கும் வாக்கை காப்பாற்ற முடியும். உங்களுக்குள் மறைந்திருக்கும் திறமைகளை உங்கள் செயல்களால் மற்றவர்களுக்கு புரிய வைப்பீர்கள். நீண்டகாலமாக முடியாமல் இருக்கும் விஷயங்களை இப்போது முடித்துக் காட்டுவீர்கள். அதிர்ஷ்டம் உங்களுக்கு கைகொடுக்கும் வாரம் இது.

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களின் எண்ணங்கள் நிறைவேறும் வாரம் இது. ராசிநாதன் ஆட்சி பெறுவதால் உங்களில் சிலர் இந்த வாரம் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உங்களுக்கு தேவைப்படும் ஒரு சுகத்திற்காக எதையும் செய்ய நீங்கள் தயாராகும் வாரம் இது. உயர்கல்வி கற்பதற்கு இருந்த தடைகள் தற்போது நீங்கும். சுக்கிரன் புதனுடன் ராசியில் இணைவதால் பெண்கள் விஷயத்திலும், சங்கடங்களும், சச்சரவுகளும் உண்டாகும். அறிமுகமில்லா பெண்களிடம் கவனமாக இருங்கள். பணவரவு தாராளமாக இருக்கும். வேலை செய்யும் இடங்களில் திறமையைக் காட்ட முடியும்.
நண்பர்களால் மதிக்கப்படுவீர்கள். அந்தஸ்து, கௌரவம் நிலையாக இருக்கும். அதிர்ஷ்டம் கை கொடுக்கும். தெய்வ ஆசிர்வாதம் உண்டு. இதுவரை வேலை கிடைக்காமல் இருந்தவருக்கு வேலை கிடைக்கும். கணவன்-மனைவி உறவு நன்றாக இருக்கும். மனைவி சொல்லைக் கேளுங்கள். வாழ்க்கை மேம்படும். தாமதித்து வந்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவைகள் இப்போது உண்டு. பெண்களுக்கு இது உற்சாகமான வாரமாக இருக்கும். குடும்பத்தில் நீங்கள் சொல்லும் யோசனைகள் ஏற்கப்படும். சிலர் வெளிநாடு செல்வீர்கள்.

கடகம்:
பெரும்பாலான கடக ராசிக்காரர்களுக்கு கடந்த சில மாதங்களாக நடந்து வரும் அஷ்டமச்சனி கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதிலும் பூசம் நட்சத்திரம் படாதபாடு பட்டு விட்டது. உண்மையில் அஷ்டமச்சனி என்பது பணம் பற்றிய புரிதல்களை மட்டுமே கொடுக்கக் கூடியது. மேலும் சனி தரும் அனுபவங்களை வைத்துத்தான் நம்முடைய எதிர்கால வாழ்க்கையை நாம் நன்றாக அமைத்துக் கொள்ள முடியும். எனவே கடக ராசி இளைஞர்கள் வரக்கூடிய வாரங்களை நினைத்து உண்மையிலேயே கவலைப்படுவதற்கு எதுவும் இல்லை. சோதனைகள் எதுவும் இனிமேல் கடகத்திற்கு வராது.
2024 ம் ஆண்டு ஆயில்யம் நட்சத்திர இளைஞர்களுக்கு வேலை, தொழில், வியாபாரம் போன்ற அமைப்புகளில் சில பாதிப்புகள் மன அழுத்தங்கள் போன்றவைகள் வரும். ஆனால் அவை அனைத்தும் நீங்கள் சிலவற்றை தெரிந்து கொள்வதற்கான நல்லவைகளாகவே இருக்கும். மனஉறுதி மிக்க கடக ராசிக்காரர்கள் அஷ்டமச்சனி காலத்தை மிக அருமையாக சமாளிப்பீர்கள் என்பது தான் உண்மை. பெரிய பாதிப்புகள் வராமல் தடுக்க சனிக்கிழமைதோறும் அருகில் இருக்கும் ஈஸ்வரன் கோவிலில் உள்ள காலபைரவருக்கு நல்லெண்ணெய் விளக்கேற்றி வழிபடுவது நல்லது.

சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு சந்தோஷம் தரும் வாரம் இது. உங்களில் சிலர் எத்தனையோ முயற்சிகளுக்கு பின் அடைய முடியாத விஷயங்களை இந்த வாரம் நிறைவேற்றிக் காட்டுவீர்கள். சிலருக்கு வேலை விஷயமான நல்ல தகவல்கள் வரும். சிலகாலமாக உடல்நலம் குறைந்திருந்தவர்கள், கடன் தொல்லைகளால் கஷ்டபட்டவர்கள், எந்த ஒரு விஷயத்தையுமே நல்லவிதமாக முடிக்க முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தவர்கள் அனைவரும் இந்த வாரம் அனைத்து பின்னடைவுகளும் நீங்கி சந்தோசம் அடைவீர்கள். பொன், பொருள் சேர்க்கை ஏதேனும் உண்டு.
ஒரு முக்கிய பலனாக அடுத்த வருடம் மார்ச் மாதம் முதல் சிம்ம ராசிக்கு அஷ்டமச்சனி ஆரம்பிக்க இருக்கிறது. இளைய பருவத்தினருக்கு வாழ்க்கையை புரிய வைக்க வேண்டிய கடமை சனிக்கு இருப்பதால் 30 வயதுக்கு உட்பட்ட சிம்ம ராசிக்காரர்களுக்கு இப்பொழுது உறவுகள் மற்றும் நட்புகளில் யார் உண்மையானவர், யார் மேலாக நடிப்பவர், வெறும் உதட்டால் மட்டும் பேசுபவர் யார், உள்ளத்தில் வேறொன்று வைத்திருப்பவர் யார் என்பது போன்ற சில அடையாளங்கள் இனிமேல் இருக்கும். அதைப்போலவே பணம் என்றால் என்ன, அதை எப்படி சம்பாதிப்பது என்ற அனுபவங்களும் இனிமேல் இருக்கும்.

கன்னி:
கன்னிக்கு எதிர்மறை பலன்கள் இல்லாத வாரம் இது. உங்களின் தொல்லைகள் அனைத்தும் விலகிக் கொண்டிருக்கின்றன. ராசிநாதன் புதன் வலுவான நிலையில் இருப்பதால் சந்தோஷமான மனநிலையில் இருப்பீர்கள். சிலருக்கு மட்டும் ஏற்கனவே முடிந்து விட்டது என்று நினைத்து நிம்மதியாக இருந்த விஷயங்கள் மீண்டும் கிளறப்படும். சுக்கிரனின் வலுவால் சிலருக்கு திருமணத்திற்கான ஆரம்பங்கள் இருக்கும். முதல் திருமணம் தோல்வி அடைந்து வேதனையில் இருப்பவர்களுக்கு எதிர்கால நல்வாழ்விற்கான அடித்தளங்கள் அமையும்.
பங்குச்சந்தை, சூதாட்டம் போன்றவைகளில் எதிர்பாராத லாபங்கள் கிடைக்கும். வேலையின் காரணமாக பிரிந்திருந்த கணவன் மனைவியர் ஒரே இடத்திற்கு மாற்றலாவார்கள். குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அனைத்து விஷயங்களையும் மனைவியின் பொறுப்பில் விட்டு விடுவதன் மூலம் சிக்கல்கள் எதுவும் வராமல் தப்பிக்கலாம். தாயாரிடம் ஏதேனும் ஒரு விஷயத்திற்கு சம்மதம் கேட்க இப்பொழுது சரியானநேரம் என்பதால் இந்த நேரத்தை உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள்.

துலாம்:
சாதனைகளைச் செய்ய நீங்கள் தயாராக வேண்டிய வாரம் இது. உங்கள் எண்ணங்களிலும், செயல்களிலும் இதுவரை இருந்து வந்த தயக்கங்கள் நீங்கி புத்துணர்வும், சந்தோஷமும் இப்போது உண்டாகும். ராசிநாதன் ஒன்பதாம் இடத்தில் வலுப் பெறுவதால் செயல்திறன் உண்டாகப் பெறுவீர்கள். யோகாதிபதி புதனும் அங்கே ஆட்சி பெறுவதால் இனிமேல் கேட்டது கிடைக்கும். நினைத்தது நடக்கும். நான்கு பேர் இருக்கும் இடத்தில் உங்களின் பேச்சு கவனிக்கப்படும். தொழிலில் முன்னேற்றம் படிப்படியாக இருக்கும். எதிலும் நல்ல பேர் எடுப்பீர்கள்.
வார ஆரம்பத்தில் சிலர் தவறுகளை செய்தாலும், வாரத்தின் இறுதியில் அவற்றை சீர்படுத்திக் கொண்டு உங்கள் செயல்திறனை பிறருக்குக் காட்டுவீர்கள். சிலருக்கு இதுவரை இருந்து வந்த மனக்குழப்பம் விலகத் தொடங்கும். அடுத்த வாரம் முதல் நீங்களே உங்களின் சொந்தக் காலில் நிற்பதற்கு ஏதுவாக விஷயங்கள் நடக்கும். வேலை விஷயங்களில் தன்னம்பிக்கையை அடைவீர்கள். இதுவரை உங்களுக்கு இருந்து வந்த தயக்கமும், மெத்தனமும் விலகி சுறுசுறுப்பு அதிகமாகும். துலாத்திற்கு நல்ல காலம் வந்து விட்டது.

விருச்சிகம்:
ராசிநாதன் செவ்வாய் ஆறாம் வீட்டில் மறைந்திருப்பதால் விருச்சிக ராசிக்காரர்களின் செயல்கள் அனைத்திற்கும் இந்தவாரம் தடைகள் இருக்கும். உங்களில் சிலருக்கு எதிலும் ஒரு சந்தேகப் பார்வையும், யாரையுமே நம்ப முடியாத மன சஞ்சலமும் இருக்கும். தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் லாபம் தரும். அதேநேரத்தில் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத நிலையிலும் சில விஷயங்கள் இருக்கும். சிலருக்கு எல்லாவற்றிலும் முதலில் பிரச்னைகள் தோன்றி பிறகு அனைத்தும் நல்லபடியாக முடியும். பணவரவிற்கு குறை இல்லை.
நடுத்தர வயதுடையவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வார இறுதியில் புனித இடங்களுக்கு செல்வதோ, குல தெய்வ வழிபாடோ செய்வீர்கள். கணவன் மனைவி உறவில் முணுமுணுப்புக்கள் உண்டு. குழந்தைகள் செலவு வைப்பார்கள். இளைய சகோதரரிடம் கருத்து வேறுபாடு வரும். தந்தைவழி உறவினர் வகையில் மனக்கசப்புக்கள் இருக்கும். பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும். அரசியல்வாதிகளுக்கு இது நல்லவாரம். அதிகாரப் பதவி வரும். நகைச்சுவை நடிகர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும்.

தனுசு:
சூரியனும் சந்திரனும் வலுவான நிலையில் அமைய, குருவும், செவ்வாயும் 10 மற்றும் 11 ஆம் இடங்களைத் தொடர்புகொள்வது தனுசு ராசிக்கு மிகுந்த யோகம் தரும் அமைப்பு. தனுசுக்கு இது பொன்னான வாரம் என்று சொல்லிவிடலாம் இந்த வாரத்தில் எதை செய்கிறீர்களோ எதை ஆரம்பிக்கிறீர்களோ அவைகள் அனைத்தும் உங்களுடைய எதிர்காலத்திற்கான மிகப்பெரிய உதவியாக இருக்கும். சோம்பலை தவிருங்கள். எதையும் செய்யுங்கள். எல்லாம் நன்றாகவே முடியும். தனுசு ராசிக்காரர்கள் இனிமேல் நன்றாக இருப்பீர்கள்.
தனுசு ராசிகாரர்கள் அனைவரும் வயதிற்கு ஏற்ற வகையில் மிகவும் நன்றாக இருக்கக்கூடிய வாரம் இது. அனைத்தும் கைகொடுக்கும் நிலைமையில் இருக்கிறது. இதுவரை எந்த ஒரு விஷயத்திலும், யார் உதவியும் கிடைக்காமல் தனி மனிதனாகவே போராடி கொண்டிருந்தவர்களுக்கு இனி அடுத்தவர்களின் உதவி தாராளமாக கிடைக்கும். உங்களில் சிலர் குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். 15,16 ஆகிய நாட்களில் பணம் வரும். 9-ந்தேதி மதியம், 2:07 மணி முதல் 11-ந்தேதி இரவு 11:39 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்றாலும் கெடுதல் எதுவும் நடக்காது.

மகரம்:
மகரத்தினர் எந்த ஒரு விஷயத்தையும் தெளிவாகப் புரிந்து கொண்டு ஜெயிக்கும் வாரம் இது. இதுவரை வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த மனக்கசப்புக்கள் விலகும். குறிப்பாக பெண்களுக்கு அலுவலகங்களில் இருக்கும் தொந்தரவுகள் குறைய ஆரம்பிக்கும். நண்பர்கள் உதவுவார்கள். சகோதர உறவு மேம்படும். தொழிலில், வேலையில் நல்ல அனுபவங்களும், வளர்ச்சியும் இருக்கும். பிறரால் பாராட்டப் படுவீர்கள். குடும்பத்தில் உற்சாகம் இருக்கும். சுற்றுலா சென்று வருவீர்கள். கிரகங்கள் உங்களுக்கு சாதகமான நிலையில் இருக்கின்றன.
பணவரவு நன்றாகவே இருக்கும். சிலருக்கு மட்டும் அலைச்சல்கள் அதிகமாக இருக்கும். கைக்கெட்டும் தூரத்தில் உணவு இருந்தாலும் எடுத்து சாப்பிடுவதற்கு நேரம் இருக்காது. வேலைமாற்றம் செய்யப்பட்டவர்கள் பழைய இடத்திற்கே திரும்பி வருவீர்கள். 10,11 ஆகிய நாட்களில் பணம் வரும். 11-ந்தேதி இரவு 11:39 மணி முதல் 14-ந்தேதி காலை 11.54 மணி மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்றாலும் சந்திரன் வளர்பிறை நிலையில் இருப்பதால் கெடுதல்கள் எதுவும் நிச்சயமாக நடைபெறாது. ஆயினும் புதிய முயற்சிகள் எதுவும் இந்த நாட்களில் வேண்டாம்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களின் தயக்கங்களும், பயங்களும் விலகும் வாரம் இது. சோதனைகள் அனைத்தும் முடிந்துவிட்டன. கும்பம் சாதிக்கும் நேரம் வந்து கொண்டிருக்கிறது. ஜென்ம சனி இன்னும் சில மாதங்களில் விலக இருப்பதால் சிலருக்கு வேலையில் நல்ல மாற்றங்கள் இருக்கும். சிலர், தொழிலை மாற்றலாமா என்று யோசிப்பீர்கள். இப்போது நடைபெறும் மாற்றங்கள் எதிர்காலத்தில் நன்மைகளையே தரும் என்பதால் கும்பத்திற்கு துன்பங்கள் இல்லாத வாரம் இது. பெரிதும் பாதிக்கப்பட்ட சதயம் நட்சத்திரகாரர்கள் இனிமேல் நிம்மதியாக தூங்குவீர்கள்.
கும்பத்தின் தனித்துவம் வெளிப்படும் வாரம் இது. இதுவரை அடுத்தவரின் ஆதிக்கத்திலும், குறிப்பாக சகோதரர், சகோதரிகளின் ஆதரவிலும், பெற்றோர்களின் கையை எதிர்பார்த்தும் இருந்து வந்த கும்பத்தினருக்கு இனி அது தேவை இருக்காது. 12,13 ஆகிய நாட்களில் பணம் வரும். 14-ந்தேதி காலை 11:54 மணி முதல் 17-ந்தேதி அதிகாலை 12:35 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் எந்த ஒரு விஷயத்திலும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. புதிதாக ஒருவரை அறிமுகப்படுத்திக் கொள்வதும் இந்த நாட்களில் வேண்டாம்.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு வரப்போகின்ற ஜென்மச் சனியினைப் பற்றி சில கவலைகள் இருப்பதாக தெரிகிறது. உண்மையில் 50 வயது மேற்பட்ட, கடந்த இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பருவ வயதில், முதல் சுற்று ஏழரைச் சனியின் கடுமைகளை அனுபவித்தவர்களுக்கு இப்போது வரும் ஜென்மச்சனி இரண்டாம் சுற்று பொங்கு சனியாகவே செயல்படும் என்பதால், நடுத்தர வயது மீனத்தினருக்கு வரும் ஜென்மச்சனி கஷ்டங்களுக்கு பதிலாக லாபங்களையும் பண வரவையும், வீடு, வாகன சேர்க்கை போன்றவைகளை தரும். எனவே கவலை வேண்டாம்.
நீண்ட நாட்களாக சொந்தவீடு இல்லையே என்று ஏங்குவோரின் கனவு இப்போது நனவாகும். திருமணமாகாமல் இருப்பவருக்கு திருமண உறுதி செய்யும் நிகழ்ச்சிகள் உண்டு. கூட்டுத் தொழில் சிறப்படையும். பங்குதாரர்கள் உதவியாக இருப்பார்கள். 14,15 ஆகிய நாட்களில் பணம் வரும். 17-ந்தேதி அதிகாலை 12:35 மணி முதல் 19 -ந்தேதி காலை 11.05 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் எதிலும் கவனமும் எச்சரிக்கையுமாக இருப்பது நல்லது. இந்த நாட்களில் புதிய முயற்சிகள் எதையும் செய்ய வேண்டாம்.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
21,800SubscribersSubscribe

Latest Articles