‘குரங்கு பொம்மை’ எனும் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பாரிய வெற்றியைப் பெற்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘மகாராஜா’ எனும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, பொலிவுட் நடிகர் அனுராக் காஷ்யப், ‘விருமாண்டி’ அபிராமி, ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா, மம்தா மோகந்தாஸ், முனிஸ்காந்த், திவ்யபாரதி, நட்டி என்கிற நட்ராஜ், சிங்கம் புலி, அருள்தாஸ், மணிகண்டன், வினோத் சாகர், பி. எல். தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பி. அஜனீஸ் லோகநாத் இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தை ஃபெசன் ஸ்டுடியோஸ் மற்றும் தி ரூட் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜெகதீஷ் பழனிச்சாமி மற்றும் சுதன் சுந்தரம் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இந்தத் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி குறுகிய கால அவகாசத்திற்குள் ஆறு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது. இந்நிலையில் இந்த திரைப்படம் எதிர்வரும் 14-ஆம் (June)திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகிறது இதனால் விஜய் சேதுபதியின் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.
இதனிடையே ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி தனி கதாநாயகனாக நடித்து இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான ‘மெரி கிறிஸ்மஸ்’ எனும் திரைப்படம் வணிக ரீதியான வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் அவர் மீண்டும் தனி கதாநாயகனாக நடித்திருக்கும் ‘மகாராஜா’ திரைப்படம் விரைவில் வெளியாகிறது. இந்த திரைப்படம் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பாரிய வெற்றியை பெற்றால் தான் திரையுலகில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதிக்கு சந்தை மதிப்பு நீடிக்கும் என்றும், அவர் தற்போது கேட்கும் இந்திய மதிப்பிலான இருபது கோடி ரூபாய் ஊதியத்தை தயாரிப்பாளர்களால் தர இயலும் என்றும் திரையுலகினர் தெரிவித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.