ஆந்திர பிரதேசம், ஜார்க்கண்ட், ஒடிசா ஆகிய மூன்று மாநிலங்களில் உள்ள பாதை வசதி குறைவான பகுதிகளுக்கு ஹெலிகாப்டர் மூலமும், படகு மூலமும் வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் தேர்தல் அதிகாரிகள் அழைத்துச் செல்லப்பட்டு அங்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.
காலை 7 மணி முதல் மாலை 6:00 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் ஆந்திர பிரதேசத்தில் உள்ள சில தொகுதிகளில் மட்டும் ஆளும் வை.எஸ். ஆர் காங்கிரஸ் கட்சியினருக்கும், எதிர்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியினருக்கும் சிறிய அளவிலான வன்முறை நடைபெற்றது. இது தொடர்பாக இரு கட்சிகளும் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்துள்ளது. மேலும் மேற்கு வங்கம் மற்றும் பீஹார் ஆகிய மாநிலங்களிலும் சில வாக்குச்சாவடிகளில் வன்முறை நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேற்கு வங்கத்தில் 78.44 சதவீதமும், ஆந்திர பிரதேசத்தில் 78. 25 சதவீதமும், மத்திய பிரதேசத்தில் 70.98 சதவீதமும், ஜார்கண்ட் மாநிலத்தில் 65.31 சதவீதமும், தெலுங்கானாவில் 64.87 சதவீதமும், உத்தர பிரதேசத்தில் 56.35 சதவீதமும், பீகாரில் 54.14 சதவீதமும், மகாராஷ்டிரா மாநிலத்தில் 52.49 சதவீத வாக்குகளும் பதிவாகின. மிகக் குறைந்த அளவாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 38 சதவீத வாக்குகள் பதிவாகின.
இதைத்தொடர்ந்து தரவுகளின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் நான்காம் கட்ட தேர்தலில் 67 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தெரிவித்துள்ளது. துல்லியமான வாக்கு சதவீதம் விரைவில் அதிகாரப்பூர்வமாக இணையதளத்தில் பதிவிடப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நிறைவடைந்த மூன்று கட்ட தேர்தல்களில் கடந்த 2019 ஆம் ஆண்டை விட வாக்குப்பதிவு குறைவு என தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் நான்காம் கட்ட தேர்தலில் கடந்த தேர்தலை விட அதிக அளவில் வாக்கு சதவீதம் பதிவாகி இருக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
நான்காம் கட்ட பாராளுமன்ற தேர்தலுடன் ஆந்திர பிரதேசம், தெலுங்கானா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவை பொதுத் தேர்தலும் நடைபெற்றது. இதன் காரணமாக நான்காம் கட்ட தேர்தலில் வாக்கு சதவீதம் அதிகம் என்றும் அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள்