27 C
Cañada
Wednesday, July 3, 2024
spot_img

வார ராசி பலன்கள் (03.06.2024–09.06.2024)

மேஷம்:
ராசிநாதன் செவ்வாய் இந்த வாரம் முதல் ராசியிலேயே ஆட்சி நிலையில் இருப்பது மேஷத்திற்கு நல்ல அமைப்பு. இதுவரை இருந்து வந்த பிடிவாதத்தை தளர்த்திக் கொண்டு எதையும் புதிய கோணத்தில் மேஷத்தினர் அணுகும் வாரம் இது. வியாழன், வெள்ளிக்கிழமைகளில் எதிர்பார்த்த ஒரு நிகழ்வு உங்கள் எண்ணம் போலவே நடைபெறும். சிலருக்கு எதிர்கால முன்னேற்றத்திற்கான அடிப்படை நிகழ்ச்சிகள், அறிமுகங்கள் உண்டு. பருவ வயதுக் குழந்தைகளை வைத்திருப்பவர்கள் அவர்களுடைய தனிப்பட்ட பிரச்சினைகளை தெரிந்து கொள்வது நல்லது.
கடந்த சிலமாதங்களாக உங்களில் சிலருக்கு இருந்து வந்த தடைகள் விலகப் போகிறது. இதுவரை இருட்டில் இருந்து வந்த நீங்கள் வெளிச்சத்திற்கு வருவீர்கள். குடியானவனின் வீட்டில் குதூகலம் இருக்கும், ஞானிகளின் தரிசனம் கிடைக்கும். இதுவரை நடந்த எதிரான விஷயங்களால் பரம்பொருளின் மேல் கோபமாக இருந்தவர்கள் மனம் மாறி கோவிலுக்குச் சென்று நன்றி செலுத்தும் அளவிற்கு இனி நல்லவைகள் நடக்கும். ஏதேனும் நேர்த்திக் கடன்கள் பாக்கியிருந்தால் உடனே நிறைவேற்றுங்கள்.

ரிஷபம்:
ராசிநாதன் சுக்கிரன் ராசியிலேயே ஆட்சி நிலையில் இருப்பதால் ரிஷபத்திற்கு ஆனந்த வாரம் இது. மேலும் தனாதிபதி புதனும், குருவும் ராசியில் இருப்பதும் ரிஷபத்திற்கு இது தீமைகள் இல்லாமல் மேன்மைகளைத் தரும் வாரம் என்பதைக் காட்டுகிறது. ராசிநாதன் வலுவாக உள்ள நிலையில், தொழில் ஸ்தானத்தில் தர்ம கர்மாதிபதி சனி ஆட்சியாக இருப்பதால் சிலருக்கு தற்போது குறுக்கு வழியில் சீக்கிரமாக வெற்றியை அடைவது எப்படி போன்ற விஷயங்களில் நாட்டங்கள் ஏற்படும். நேர்வழியில் மட்டுமே சிந்தித்து வெற்றிகளை அடைய வேண்டிய வாரம் இது.
வேலை, தொழில் செய்யும் இடங்களில் மதிப்பு மரியாதை கூடும்படியான நிகழ்ச்சிகள் இருப்பதோடு அன்னிய இன, மத, மொழிக்காரர்கள் மூலம் உதவிகளும் கிடைக்கும். வார இறுதியில் பணவரவு குறைந்து நெருக்கடிக்குள்ளாக்கும் என்பதால் எதையும் யோசித்து செய்ய வேண்டியது அவசியம். அதேநேரத்தில் வராது என்று கைவிட்ட பணம் எதிர்பாராத இடத்திலிருந்து வரும். எதிர்பாராமல் வரும் செலவுகளால் திக்குமுக்காடி ரிஷபத்தினர் சிக்கனத்தை கற்றுக்கொள்ளும் வாரம் இது.

மிதுனம்:
மிதுன ராசியின் பனிரெண்டாமிடத்தில் சுக்கிரன், குரு, சூரியன், புதன் நால்வரும் வலுவாக அமைந்து, எட்டு, பனிரெண்டாம் பாவகங்கள் வலுப் பெறுவதால் மிதுன ராசிக்காரர்கள் மறைமுகமான வழிகளில், வெளியில் சொல்ல முடியாத வகையில் வருமானம் பெறும் வாரம் இது. உங்களின் பொருளாதார நிலை நன்றாக இருக்கும். வெளிநாடு சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களும் வெற்றிகரமாக கை கொடுக்கும். மாணவர்கள் உயர்கல்வி கற்பதற்கு தூர இடங்களுக்கு செல்வீர்கள்.
உங்களில் சிலரின் குடும்பத்தைப் பிரிக்க சகுனி வேலை செய்வதற்கு மூன்றாவது நபராக ஒருவர் உருவாவார் என்பதால் எவரையும் நம்பாமல் சம்பந்தப்பட்டவர்களே ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசிக் கொள்வதன் மூலம் பிரச்னைகளை இந்த வாரம் ஜெயிக்கலாம். வெளிநாட்டு வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். பெண்களுக்கு அலுவலகத்திலும் வீட்டிலும் மதிப்புக் கூடும்படியான சம்பவங்கள் இருக்கும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். கொடுத்த கடன் திரும்பி வரும். மிதுனத்திற்கு சிறப்பான வாரம் இது.

கடகம்:
வாரம் முழுவதும் சந்திரன் வலிமையான இடங்களில் இருப்பதாலும், பதினொன்றில் குரு, சுக்கிரன் இருப்பதாலும் தொழில் இடங்களில் அதிகப் பெண்களுடன் வேலை செய்யும் கடக ராசிக்காரர்கள் சில மாறுதலான அனுபவங்களை சந்திக்கின்ற வாரம் இது. உங்களுடன் இருப்பவர்கள் உங்களின் வித்தியாசத்தை உணரும் அளவிற்கு நடந்து கொள்வீர்கள். கடகத்தின் அபாரமான புத்திசாலித்தனமும் அடுத்தவர்களை துல்லியமாக எடை போடும் உங்களுடைய நுணுக்கமான திறமைகளும் வெளிப்படும் வாரம் இது.
இந்த வாரம் அமாவாசை வருவதால் உங்களில் சிலருக்கு தேவையற்ற விதத்தில் வம்புச் சண்டை வருவதற்கு வாய்ப்பு இருப்பதால் பேசுவதில் நிதானம் காட்டுங்கள். உங்களைப் பிடிக்காதவர்களின் கை தற்போது ஓங்கினாலும் இறுதி வெற்றி உங்களுக்குத்தான் என்பதை நினைவில் வையுங்கள். வயதானவர்களுக்கு மருத்துவத்திற்கு கட்டுப்படாத நோய்களும் இனி பரம்பொருளின் கருணையால் விரைவில் குணமாகும். இதுவரை டாக்டருக்கென்று ஒரு தொகையை ஒதுக்கி வைத்தது விலகி இனிமேல் அப்படி செய்ய வேண்டியது இருக்காது.

சிம்மம்:
வாரம் முழுவதும் ராசிநாதன் சூரியன், சுக்கிரன் குருவுடன் இணைந்திருப்பதால் சிம்மத்திற்கு குறைகள் எதுவும் சொல்ல முடியாத வாரம் இது. யோகாதிபதி செவ்வாய், பாக்கிய வீட்டில் ஆட்சி நிலையில் தனித்து இருப்பதால் வீடு வாகன விஷயங்களில் இப்போது நினைத்தவை நடக்கும். வெளிநாட்டு வேலை விஷயங்களில் இதுவரைக்கும் நல்லது நடக்காதவர்கள் மற்றும் நிரந்தர குடியுரிமைக்காக விண்ணப்பித்தவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். சிம்மத்தினர் தூர இடங்களின் மூலம் லாபம் காண்கின்ற வாரம் இது.
கணவன் மனைவி உறவு மனத்தாங்கலுடன் இருந்தாலும் அதில் அன்பு இழையோடும் என்பதால் குடும்பத்தில் பிரச்னை இருக்காது. உலகிலேயே நல்ல கணவன் என்று மனைவியிடம் பெயரெடுத்த ஆண்மகனே கிடையாது என்று சொல்வார்கள். மனைவியை திருப்திப்படுத்தும் மந்திரத்தை ஆண்கள் தெரிந்து கொள்ளுவது நல்லதுதான். இதுவரை இருந்து வந்த விரையங்கள் இனிமேல் இருக்காது. சம்பாதிக்கும் பணத்தை சேமிக்க முடியும். எதிரிகள் ஒழிவார்கள். போட்டிகள் விலகும். மாற்றங்களுக்கான வாரம் இது.

கன்னி:
யோகாதிபதி சுக்கிரன் ஒன்பதில் ஆட்சி நிலைபெற்று, சனி, ஆறாமிடத்தில் நல்ல அமைப்பில் இருப்பதால் கன்னி ராசிக்காரர்களுக்கு எதிர்கால கனவுகள் நிறைவேற ஆரம்பிக்கும் வாரம் இது. குருவும் ஒன்பதில் இருப்பது நன்மை தரும் அமைப்பு. இதுவரை விடாமுயற்சியுடன் முயற்சித்து வந்த ஒரு விஷயம் தற்பொழுது உங்களுக்கு சாதகமாக மாறும். சமூக ஊடகங்களில் இந்த வாரம் கன்னி ராசிக்காரர்கள் பிரபலம் அடைவீர்கள். யூடியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவைகளின் மூலமாக வருமானமும் இந்த வாரம் வரும். கன்னிக்கு யோக வாரம் இது.
சுயதொழில், வியாபாரம் போன்றவைகளில இருந்து வந்த மந்தநிலை விலகி அனைத்தும் இனி சுறுசுறுப்பாக நடக்கும். விவசாயிகளுக்கு இந்த வாரம் நன்மையை அளிக்கும். 8,9 ஆகிய நாட்களில் பணம் வரும். 3-ம் தேதி அதிகாலை 1:40 மணி முதல் 5-ம் தேதி அதிகாலை 4.14 வரை சந்திராஷ்டமம் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள் எதையும் துவங்க வேண்டாம். மேற்கண்ட தினங்களில் அறிமுகமாகும் நபர்கள் பின்னால் தொந்தரவுகளை கொடுப்பவர்களாக மாறுவார்கள் என்பதால் எதிலும் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம்.

துலாம்:
ராசிநாதன் சுக்கிரன், எட்டில் மறைந்தாலும் ஆட்சியாகவே இருக்கிறார். செவ்வாய் ஏழில் சுபத்துவமின்றி அமர்ந்து ராசியைப் பார்ப்பதால் இந்த வாரம் சகோதரர்கள் உங்கள் விருப்பத்திற்கு எதிராக நடப்பார்கள். ஆனால் நீங்கள் அதை மன்னித்து பொறுத்துப் போவீர்கள். அனைத்து விஷயங்களும் கிணற்றுக்குள் போட்ட கல்லாக இருந்து உங்களை டென்ஷனாக இருக்கச் செய்தாலும் முடிவில் எல்லோரும் உங்கள் கருத்துக்கு மதிப்புக் கொடுத்து உங்கள் வழிக்கு வருவார்கள். வாரக்கடைசியில் அதிர்ஷ்டம் கிடைக்கும் யோக வாரம் தான் இது.
விரைய வீட்டில் இருக்கும் கேது சுபவலுப் பெறுவதால் உங்களுடைய நியாயமான எண்ணங்கள் வெற்றி பெறும். எனவே முயற்சியை கைவிடாது ஊக்கத்துடன் செயல்பட்டால் அனைத்தும் உங்கள் வசம்தான். 3,4 ஆகிய நாட்களில் பணம் வரும். 5-ம் தேதி அதிகாலை 4.14 முதல் 7-ம்தேதி காலை, 7:56 மணி வரை சந்திராஷ்டமம் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. சந்திரன் எட்டில் இருக்கும் நாட்களில் மனம் ஒரு நிலையில் இருக்காது என்பதால் இந்த நாட்களில் எவரிடமும் வாக்குவாதம் தவிர்ப்பதும் நல்லது.

விருச்சிகம்:
ராசிநாதன் செவ்வாய் ஆறில் மறைந்தாலும், ஆட்சி நிலையில் இருக்கும். நல்ல வாரம் இது. எதிர்காலம் பற்றிய திட்டங்கள் மூலம் விருச்சிக ராசிக்காரர்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். திருமண பருவத்தில் இருக்கும் இளையவர்களுக்கு இந்தவாரம் மங்கள நிகழ்வுகள் உண்டு. இளைஞர்கள் சிலருக்கு அவர்களின் எதிர்கால வாழ்க்கைத்துணை அறிமுகமாவதும், அடையாளம் காட்டப்படுவதும் இந்த வார சிறப்பு நிகழ்வுகளில் ஒன்றாக இருக்கும். செவ்வாய் மறைவதால் சிலர் காரணம் தெரியாத படப்படப்புடனும், எரிச்சல் கலந்த கோபத்துடனும் இருப்பீர்கள்.
பொருத்தமில்லாத வேலையில் இஷ்டமில்லாமல் இருந்த இளைஞர்களுக்கு மாற்றங்கள் உருவாகி நல்ல வேலை கிடைக்கும். ஆரோக்கியக் குறைவையும், மனநலப் பிரச்சினைகளையும் சந்தித்தவர்கள் சீக்கிரமாக குணமடைவீர்கள். 4,5 ஆகிய நாட்களில் தனலாபம் உண்டு. 7-ம்தேதி காலை 7:56 மணி முதல் 9-ம்தேதி மதியம், 2:07 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் மேற்கொண்ட தினங்களில் நீண்ட தூர பிரயாணங்களை தவிர்ப்பது நல்லது. ஆயினும் சந்திரன் சுபத்துவமாக இருப்பதால் கெடுதல்கள் எதுவும் நடக்காது.

தனுசு:
ராசிநாதன் குருவின் சுபவலுவால் இந்த வாரம் தனுசு ராசிக்காரர்களுக்கு எதிர்ப்புகளை ஜெயிக்கும் வல்லமையும், எதையும் நிதானமாக சிந்தித்து எதிர் கொள்ளும் போக்கும் உண்டாகும். இது உங்களுக்கு நல்ல வாரம்தான். குரு, சுக்கிர தயவால் பணவரவும், சொல்லிக் கொள்ளும்படியாக இருக்கும். வார ஆரம்பத்தில் அமாவாசை அமைப்பு ஆறாமிடத்தில் நடைபெறுவதால், தொழிலிடங்களில் அகலக்கால் வைக்காதீர்கள். பொது இடங்களில் வீண் வாக்குவாதங்கள், தேவையற்ற விவாதங்கள், அரசியல்பேச்சுக்கள், அரட்டைகள் போன்றவைகள் வேண்டவே வேண்டாம்.
இளைய பருவ தனுசுவினர் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். சிறுதுரும்பும் பல் குத்த உதவும் என்பதை நினைவில் வையுங்கள். வீண் வாக்குவாதங்கள் வேண்டாம். இன்றைய சூழ்நிலையில் நீங்கள் பணிந்து போவது ஒன்றும் தவறில்லை. புலி பதுங்குவது நல்ல நேரம் வரும்போது பாய்வதற்குத்தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள். ரேஸ் லாட்டரி பங்குச்சந்தை சூதாட்டம் போன்றவைகள் இப்போது கை கொடுக்காது. யோகாதிபதி செவ்வாய் வலுவாக இருப்பதால் எதையும் சமாளிப்பீர்கள்.

மகரம்:
ராசிநாதன் சனி ஆட்சி நிலையில் இருப்பதாலும், யோகாதிபதி சுக்கிரன் ஐந்தில் இருப்பதாலும், மகரத்தினர் எதிர்பாராத அதிர்ஷ்டத்தினை பெறுகின்ற வாரம் இது. தகுதி இருந்தும் அதற்கேற்ற அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்கிற மனக்குறையில் இருக்கும் உங்களில் சிலருக்கு குறை தீரும் வாரம் இது. குறிப்பாக திருவோணம் நட்சத்திரக்காரர்கள் தொழில் இடங்களில் உங்களுடைய தனித்திறமையை அடுத்தவர்கள் உணரும் வண்ணம் வெளிப்படுத்தி பாராட்டு பெறுவீர்கள்.
எல்லா வயது மகர ராசியினரின் பணவரவும் பொருளாதார நிலைமையும் நன்றாகவே இருக்கும். நிதி நிலைமையைப் பற்றி கவலைப்பட வேண்டியது இருக்காது. ஆனாலும் வீண்செலவு செய்வதை தவிருங்கள். என்னதான் பணவரவு நிறைவாக இருந்தாலும் பற்றாக்குறையை ஒன்பதில் இருக்கும் கேது ஏற்படுத்துவார் என்பதால் சிக்கனமாக இருப்பது நல்லது. இளைஞர்கள் சிலருக்கு தொழில், வேலை போன்றவற்றில் சிக்கல்கள் இருக்கின்றன. இன்னும் சிலருக்கு நல்ல வேலை கிடைக்கவில்லை. அவைகள் படிப்படியாக தீரும்.

கும்பம்:
பிரச்னைகளுக்கு மத்தியில் கும்ப ராசியினர் நன்றாக செயல்பட்டு சிறப்பான எதிர்காலத்தை உண்டாக்கிக் கொள்ளும் நல்ல வாரம் இது. எதிர்பார்க்கும் இடத்தில் இருந்து பணம் கிடைப்பதில் தடைகள் இருக்கும். சிலருக்கு கடன் வாங்க வேண்டிய நெருக்கடிகள் இருக்கும். கடன்காரர்களுக்கு சொல்லும் தேதியில் பணம் தர முடியாமல் போகும். ஸ்பெகுலேஷன் துறைகளில் சிறிது லாபம் வருவது போல் ஆசைகாட்டி மொத்தமாக இருப்பதையும் இழக்க வைக்கும் என்பதால் கவனமுடன் இருக்கவும்.
வேலை செய்யும் இடங்களில் ஒரு தடுமாற்றமான வார்த்தை மூலம் மதிப்பை கீழிறங்கச் செய்வார் ராசியில் உள்ள சனி என்பதால் பேச்சில் கவனமாக இருங்கள். ராஜ யோகாதிபதி சுக்கிரன் ஆட்சி வலுப் பெறுவதால் வாரத்தின் முதலிரண்டு நாட்கள் சாதாரணமான நிகழ்ச்சிகள் இருந்தாலும் வார இறுதியை சந்தோஷமாக கழிப்பீர்கள். மனைவி வழி உறவினர்களுடன் மனவருத்தம் ஏற்படலாம். அவர்களிடம் உதவிகள் எதுவும் கேட்காமலும், அவர்களுக்கு உதவிகள் எதுவும் செய்யாமலும் ஒதுங்கி நிற்பது புத்திசாலித்தனம்.

மீனம்:
யோகாதிபதி செவ்வாய் ஆட்சி நிலையில் இருப்பதும், 2,9,11 ஆம் பாவகங்கள் வலிமையாக உள்ளதும், மீன ராசிக்கு எதிலும் நன்மைகளையும், புத்துணர்ச்சி மற்றும் புதிய சிந்தனைகளையும் கொடுக்கும் என்பதால் இது உங்களுக்கு யோகவாரமே. தற்போது மந்தமாக இருக்கும் தொழில், வியாபாரம் போன்றவைகள் இனிமேல் சூடுபிடித்து நாளுக்குநாள் விருத்தி அடையும். பணியிடங்களில் உங்களின் நிலைமை நல்லவிதமாக மாறுவதை நீங்களே உணர முடியும். மீனத்திற்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வாரம் இது.
ராசிநாதன் மூன்றில் உள்ளதால் சிலருக்கு வேலைமாற்றம் அல்லது டிபார்மெண்ட் மாற்றம் அல்லது டிரான்ஸ்பர் போன்ற பலன்கள் நடக்கும். உங்களின் எதிர்காலத்துக்கு அது நல்லது என்பதால் மாற்றத்தை முழுமனதுடன் ஏற்றுக் கொள்வீர்கள். எதிலும் சிண்டு முடிந்து விட சகுனிகள் தோன்றுவார்கள் என்பதால் பேச்சில் கவனம் தேவை. சகோதரர், சகோதரிகளின் உறவு மேம்படும். அவர்களால் உதவிகள் இருக்கும். அக்கா தங்கை உறவுகள் பலப்படும். இதுவரை திருமணம் தாமதமான மூத்தவர்களுக்கு திருமணம் உறுதியாகும்.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
21,800SubscribersSubscribe

Latest Articles