ஈரானின் ஜனாதிபதி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஆகியோருக்கான இறுதி ஊர்வலம் தற்போது ஆரம்பமாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானின் ஜோல்பா நகருக்கு அருகில் உள்ள மலைப் பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்ததில், இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் ஆகியோர் நேற்று உயிரிழந்திருந்தனர். இந்நிலையில், ஈரானில் 5 நாட்களுக்கு துக்க தினம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதோடு, இலங்கை உள்ளிட்ட பல்வேறுநாடுகளில் துக்க தினமாகவும், தேசிய கொடி அரைக்கம்பத்திலும் பறக்கவிடப்பட்டுள்ளது.
குறித்த விபத்து தொழில்நுட்பக் கோளாறால் ஏற்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.எனினும் தற்போது விபத்து தொடர்பில் விசாரணையை ஈரான் புலனாய்வுத்துறை ஆரம்பித்துள்ளதாகவும், அந்த இடத்திற்கு ஒரு குழுவை அனுப்பியுள்ளதாகவும் ஈரானின் ஆயுதப்படை தெரிவித்துள்ளது.
விபத்து நடந்த இடத்திற்கு மிக அருகில் உள்ள பெரிய நகரமான Tabriz இல் நடந்த இறுதி ஊர்வலம், நாட்டின் இஸ்லாமியப் புரட்சியின் போது திரண்ட மக்களிலும் பார்க்க அதிகம் என ஈரான் தரப்பு தெரிவித்துள்ளது.