தமிழ் சினிமாவின் சிறந்த குணச்சித்திர நடிகர்களில் ஒருவரான கருணாசும், கதையின் நாயகர்களில் ஒருவரான விமலும் இணைந்து நடித்திருக்கும் ‘போகுமிடம் வெகு தூரமில்லை’ எனும் திரைப்படம் ரசிகர்களை கண்கலங்க வைக்கும் உணர்வுபூர்வமான படைப்பு என படக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.
அறிமுக இயக்குநர் மைக்கல் கே. ராஜா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘போகுமிடம் வெகு தூரமில்லை’ எனும் திரைப்படத்தில் விமல், கருணாஸ், மேரி ரிக்கெட்ஸ், ‘ஆடுகளம்’ நரேன், மனோஜ் குமார், பவன், அருள்தாஸ், தீபா சங்கர், சார்லஸ் வினோத், வேல. ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். டெமில் சேவியர் எட்வர்ட்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு என். ஆர். ரகுநந்தன் இசையமைத்திருக்கிறார். அமரர் ஊர்தி வாகனத்தை இயக்கும் இரண்டு மனிதர்களின் வாழ்வியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஷார்க் 9 பிக்சர்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சிவா கில்லாரி தயாரித்திருக்கிறார்.
இப்படத்தினை பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது அப்போது படக்குழுவினருடன் இயக்குநர் செந்தில்நாதன், பாடலாசிரியர் -கவிஞர் சினேகன், இயக்குநர் தினகரன், தயாரிப்பாளர் தேனப்பன் உள்ளிட்ட பலர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர்.
படத்தை பற்றி இயக்குநர் பேசுகையில், ” இந்த கதைக்களம் புதிது. இந்த படத்திற்காக வெகுதூரம் பயணித்துள்ளேன். கதை மீது நம்பிக்கை கொண்ட தயாரிப்பாளர் இப்படத்தை தயாரிக்க ஒப்புக்கொண்டார். இந்தத் திரைப்படத்தில் வசனங்கள் பேசாமல் முக பாவனையுடன் நடிக்க வேண்டி இருந்தது. அதனை நடிகர் விமல் நன்றாக நடித்து எங்களை அசத்தினார். இந்த திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் என எதிர்பார்க்கிறேன். வித்தியாசமான அனுபவத்தையும் வழங்கும் என நம்புகிறேன்” என்றார்.